×

தயாரிப்பாளர் சங்கத்துக்கு எப்போது தேர்தல்?

* ஐகோர்ட் கேள்வி
* சங்கத்துக்கு புது அதிகாரி நியமனம்
* தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிதாக தனி அதிகாரியை நியமனம் செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த2019 ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சங்கத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளர் என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்து தமிழக வணிகவரித்துறை உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து, தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இதுவரை பதவி வகித்து வந்த தனி அதிகாரி சேகர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம்பணிமாறுதலாகி விட்டார்.எனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரி பதவிக்கு புதிய தனி அதிகாரியாக மஞ்சுளா என்பவரை நியமித்து தமிழக அரசு ஜனவரி 2ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது என்றார்.

இதற்கு விஷால் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடும்போது, ஏற்கனவே இருந்த தனி அதிகாரி பதவி காலம் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது. எனவே,தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடவேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.

Tags : Election for Producers Association ,election ,Producers Association , election , Producers Association?
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு...