பெரம்பூர்: பெரம்பூர் அருகே உள்ள அகரம் ஜெகன்நாதன் தெரு மற்றும் பார்த்தசாரதி தெரு சந்திப்பில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதாலும், சிறுவர்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பெரம்பூர் அருகே உள்ள அகரம் ஜெகன்நாதன் தெரு மற்றும் பார்த்தசாரதி தெரு சந்திப்பில் ஒரு விளையாட்டு திடல் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் சிறுவர்கள் மாலை நேரங்களில் இங்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் விளையாட்டு திடலில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் தினமும் 10க்கும் மேற்பட்ட கார் மற்றும் ஆட்டோக்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படுவதாலும் விளையாட்டுத் திடலை பயன்படுத்த முடியாமல் சிறுவர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
விளையாடும்போது வாகனங்கள் மீது பந்து பட்டு கண்ணாடி உடைந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என சிறுவர்களை அப்பகுதியில் வாகனம் நிறுத்துவோர் மிரட்டுவதும் தொடர்ந்தபடி உள்ளது. மேலும் சிறிது சிறிதாக விளையாட்டுத் திடலை அப்பகுதியை சேர்ந்த சில ஆக்கிரமித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வுக்கான அந்த பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தபோதும் எவரும் கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மாநகராட்சி திடலை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி சிறுவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் தினமும் பள்ளி முடிந்து இந்த மைதானத்தில் விளையாட வருவோம். ஆனால் கடந்த ஓராண்டாகவே எப்போது இங்கு விளையாட வந்தாலும் இந்த பகுதியில் கார் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். வாகனங்களின் மீது பந்து பட்டு கண்ணாடி உடைந்தால் நீங்கள் தான் சரி செய்து தர வேண்டும் என்றும் கூறுகின்றனர். மேலும் விளையாட்டு திடலின் முன் பகுதியில் சுவர் இல்லாததால் குப்பைகளை அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த மாநகராட்சி திடலை பயன்படுத்துவதையே நாங்கள் விட்டுவிட்டோம்’’ என்றனர்.