லக்னோ: இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சி இன்று முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, எதிர்காலத்தில் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் மாறும். புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இந்தியாவில் 25 ராணுவ தளவாட உபகரணங்களை தயாரிப்பதே நமது நோக்கம் என்றார். பீரங்கி துப்பாக்கிகள், விமானந்தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்றார். தொடர்ந்து, ராணுவ கண்காட்சியில் உள்ள ஆயுதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று குறித்து ஏற்பாட்டாளர் பிரதமர் மோடிக்கு விளக்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி அந்த துப்பாக்கி எடுத்து பயிற்சி செய்து பார்த்தார்.
பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த புகைப்படத்துடன் #PICOFTHEDAY என்று சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.