தமிழரின் பாரம்பரியத்தை உலகறிய செய்தவர் மாமன்னர் ராஜராஜசோழன். உலகம் வியக்கும் வகையில் தமிழரின் சிறப்புமிக்க கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக தஞ்சை ராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலை உருவாக்கிய பெருமைக்குரியவர் மாமன்னர் ராஜராஜன். சுந்தரசோழனுக்கும், வானமாதேவிக்கும் மகனாக பிறந்தவர் ராஜராஜசோழன். இவரது மகன் ராஜேந்திரன் சோழன் ஆகும். சிவன் மீது அதிகஅளவில் பக்தி கொண்ட ராஜராஜசோழன், இமயமலைக்கு ஈடாக தஞ்சாவூரில் பிரமாண்டமான வகையில் கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணி இக்கோயிலை கட்டினார். இதனால் இக்கோயிலுக்கு ‘தட்சிணமேரு’ என்ற சிறப்பும் உண்டு. இக்கோயில் தஞ்சை, சோழ நாடு, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலை கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன், கி.பி. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 6 அடி அஸ்திவாரத்தில், விமானம் 216 அடி உயரம் கொண்டுள்ளதாகும். முதன்மைக் கடவுளான லிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் வந்த பாண்டியர்களால் 13-ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும், விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களால் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி, 20 டன் எடையும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியாகவும் உள்ளது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்துக்கு கட்டப்பட்டதாகும்.
உச்சியில் 80 டன் கல்: பெருவுடையார் கோயில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் ஆயர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோயில் கட்டி முடிக்கும் வரை கோயில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80 டன் எடை கொண்ட கல்லில் ‘அழகி’ என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல்லின் நிழலே, இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது என்று கூறுவார்கள். உலகமே வியக்கும் கோயிலை கட்டிய ராஜராஜசோழன்தான் முதன் முதலில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஒவ்வொரு வீடுகளுக்கும் எண் வைத்தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பற்காக குடவோலை முறைகள், நிலங்களை அளப்பதற்காக அளவுகோல் போன்றவற்றை கொண்டு வந்து வரையறைப்படுத்தினான் என்பது நிதர்சனமான உண்மை.