சென்னை: தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நிலத்தடி நீர் பயன்பாட்டை தீவிரமாக கண்காணிக்க பொதுப்பணித்துறைக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதாலும் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில், கடந்த 2016க்கு பிறகு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து கொண்டே சென்றது. இந்நிலையில், கடந்த 2019ல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1 முதல் 3 மீட்டர் வரை உயர்ந்து இருந்தது. ஆனால், பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது. இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், தமிழகம் முழுவதும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உட்பட 29 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்தாண்டு ஜனவரியை காட்டிலும், கடந்த ஜனவரி மாதத்தில் 0.15 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. எனவே, நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.