சின்னாளபட்டி: கிராமங்களில் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நவாமரத்துப்பட்டியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றியகுழு தலைவர் சிவகுருசாமி தலைமை வகித்தார். முருநெல்லிக்கோட்டை ஊராட்சி தலைவர் முருகன் (எ) சின்னு வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணி, ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து மாநில திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேசுகையில், ‘எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் சமுதாயக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்டது. பொதுமக்களும் பங்களிப்பாக நன்கொடை வழங்கி இந்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு இப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவை உடனடியாக நிறைவேற்றப்படும்’ என்றார். விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பண்ணைப்பட்டி ஜெகநாதன், பேரூர் செயலாளர்கள் கன்னிவாடி சண்முகம், ஸ்ரீராமபுரம் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கன்னிவாடி இளங்கோ, எல்லைப்பட்டி ராமகிருஷ்ணன் மற்றும் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையன், பொருளாளர் நீலமலைக்கோட்டை கருப்புச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அமுதவள்ளி, வக்கம்பட்டி கானிக்கைசாமி, ஊராட்சி செயலர் கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.