சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு எப்படி நடந்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு விவரங்கள் வெளிவந்துள்ளன. அதாவது இடைத்தரகர்கள் தங்களிடம் பணம் கொடுத்த தேர்வர்களிடம் விடைத்தாளில் குறிப்பிட்ட 20 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் விடுபடும் 180 கேள்விகளுக்கு ஆள்வைத்து சரியான விடையை எழுதி வைப்பது அவர்களின் வேலையாக இருந்துள்ளது.
2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் இவ்வாறு முறைகேடு செய்த ஜெயக்குமார், சித்தாண்டி, கூட்டணி கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் மேஜிக் பேனா முறைகேட்டிற்கு மாறியுள்ளனர். காரணம் குரூப் 4 விடைத்தாளில் புகைப்படம், மற்றும் விடையளித்த கேள்விகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அவர்களால் கைவரிசையை காட்டுவது சிக்கலாக இருந்துள்ளது. மேஜிக் பேனாவை பயன்படுத்தி விடையளிப்பதன் மூலம் அந்த மை அழிந்தவுடன் பின்னர் சரியான விடையை நிரப்பிக் கொள்வது கைவரிசையாக இருந்துள்ளது.