×

இந்து மகாசபா தலைவர் உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசம் லக்னோவில் அந்தர்ராஷ்டிரிய இந்து மகாசபா அமைப்பின் தலைவர் ரஞ்சீத் பச்சன், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்ட்டார். அந்தர் ராஷ்டிரிய இந்து மகாசபை அமைப்பின் உபி மாநில தலைவராக இருப்பவர் ரஞ்சீத் பச்சன். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அவருடன் அவரது உறவினர் அதித்ய வஸ்தவா என்பவரும் சென்றார். பரிவர்தன் சவுக் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, சால்வை அணிந்த நபர் ஒருவர் இடைமறித்து தடுத்து  நிறுத்தினார். பின் அவர்களின் செல்போனை பறித்துக் கொண்டு, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சீத் பச்சன் இறந்தார். வஸ்த்தவாவுக்கு கையில் குண்டு காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரஞ்சீத் பச்சன் மற்றும் அவரது மனைவி கலிந்தி சர்மா ஆகியோர் பிரிந்து வாழ்கின்றனர். இதுதொடர்பான வழக்கு கோரக்பூரில் நடந்து வருகிறது. இதனால் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு,  இப்பிரச்னை காரணமா என விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவ நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.ரஞ்சீத் பச்சன் இதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் இருந்தார். விஸ்வ இந்து மகாசபா என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இவர் இருந்துள்ளார்.

Tags : Hindu Mahasabha ,Uttar Pradesh , Hindu Mahasabha ,Uttar Pradesh, Shot dead
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை