×

காதல் திருமணம் செய்த மகள் உட்பட 3 பேர் முகத்தில் அமிலம் வீசிய முன்னாள் தலைமைக் காவலருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் காதல் திருமணம் செய்த மகள் உட்பட 3 பேர் முகத்தில் அமிலம் வீசியதோடு, கர்ப்பிணியாக உள்ள மகளை கடத்தி சென்று அடித்து உதைத்த முன்னாள் தலைமைக் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பாலகுமார், இவரது மகள் தீபிகா என்பவர் தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி, தான் காதலித்த அதே பகுதியை சேர்ந்த சாய்குமார் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் 5 மாதம் கர்ப்பமாக உள்ள மகள் தீபிகாவின் வீட்டிற்கு வந்த பாலகுமார், மகளை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததால், பாலகுமாருடன் வந்த 4 பேர் வீட்டிற்குள் நுழைந்து ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தடுக்க வந்த, அவரது மாமியார் பாக்யலட்சுமி மற்றும் கர்ப்பமாக உள்ள அந்த வீட்டின் மற்றொரு மருமகள் சந்தியா ஆகியோரது முகத்திலும் அவர்கள் அமிலத்தை பூசியுள்ளனர். அமிலம் பூசப்பட்டதில் முகம் வெந்து மயக்கமடைந்த தீபிகாவை, தான் கொண்டுவந்த காரில் பாலகுமார் கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த பாலகுமார் தனது மகளை, வேப்பம்பட்டு மெயின்ரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபிகாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கணவன் சாய்குமாரை பிரிந்து வீட்டிற்கு வராவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, தந்தை பாலகுமார் தன்னை அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாலகுமாரை தேடி வருகின்றனர்.

Tags : policeman , Love marriage, daughter, acid, father, police
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...