ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு புதியதாக வழங்கப்பட்ட வங்கி பாஸ்புக்கில், ‘இடம் பெயர்ந்தவர்’ என்று அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஈரோடு பெரியார் நகரில் வசித்து வரும் டாக்டர் சலீம் என்பவரது மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் சேமிப்பு கணக்கை கடந்த பல ஆண்டுகளாக வைத்துள்ளார். இந்நிலையில், பழைய பாஸ்புக் முடிவடைந்துவிட்டதால் புதிதாக பாஸ்புக் வாங்க நேற்று முன்தினம் வங்கிக்கு சென்றார். அப்போது புதிய பாஸ்புக் வழங்கிய வங்கி நிர்வாகம் பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வாடிக்கையாளரின் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அச்சிட்டு கொடுத்துள்ளது.
இதில், புதிதாக ஆங்கிலத்தில் மைக்ரேசன் “இடம் பெயர்ந்தவர்” என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜஹானாரா பேகம், இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது அங்கிருந்த ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இந்நிலையில், வங்கி பாஸ்புக்கில் இடம் பெயர்ந்தவர் என்று அச்சிடப்பட்டிருந்த பாஸ்புக் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இப்புகார் குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது, தற்போது வங்கி கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி நடந்து வருவதால் தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டதாக கூறினர்.