கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டி பஞ்சாயத்திற்குட் பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அலேசீபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கும், அவரது அத்தை மகனான 25 வயதுடைய வாலிபருக்கும் இன்று (30ம் தேதி) அதே பகுதியில் உள்ள ஒரு மலை கோயிலில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையொட்டி அந்த சிறுமி கடந்த 21ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சைல்டு ஹெல்ப் லைன் எண்ணான 1098க்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் மாதப்பன், ராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர் கோமதி, கருக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இளம்பரிதி, ஊர்நல அலுவலர் லலிதா மற்றும் ரேணுகா ஆகியோர் சம்மந்தப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேற்று சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இன்று (30ம் ேததி) திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் ஊர்பெரியவர்கள் முன்னிலையில், குழந்தை திருமணம் செய்தால் ஏற்படும் பாதிப்புகள், சட்ட நடவடிக்கைகள் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் எடுத்து கூறினர். மேலும், அந்த சிறுமிக்கு திருமண வயது வரும் வரை, திருமணம் செய்ய மாட்டோம் என ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.