சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், தலைமறைவாகியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து, சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாக உள்ளார். சென்னை முகப்பேர் மேற்கு கவிமணி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் அவன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததால், அந்த வீட்டை சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த வீட்டில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற சிபிசிஐடி போலீசார், 5 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவுடன் அங்கு சென்றனர். வீடு பூட்டிக் கிடப்பதால், வருவாய்த்துறையினர் முன்னிலையிலேயே பூட்டு உடைக்கப்பட வேண்டும் என்பதால், மதுரவாயலில் இருந்து வருவாய்த்துறை குழுவினர் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே, முறைகேட்டின் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த காவலர் சித்தாண்டியின் குடும்பத்தினர் தேர்வு எழுதியது தொடர்பான விவரங்களை, டிஎன்பிசியிடம் சிபிசிஐடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.