டெல்லி: தேசிய மாணவர் படை பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் முன்தினம் நேற்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் ஆண்டு பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் சில பிரச்னைகள் தொடர்ந்தன. சில குடும்பங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அந்த பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருந்தன. இதன் காரணமாக அங்கு தீவிரவாதம் செழித்து வளர்ந்தது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட தற்போதைய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களை பார்க்க மறுக்கின்றனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டாமா? அண்டை நாடுகளில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதியை தீர்க்கவே, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி நிலவுகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் வரலாற்று அநீதியை திருத்தியுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான், பிரதமர் நரேந்திர மோடி என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படையினர் முன்னிலையில் நேற்று முன் தினம் உரையாற்றினார். டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் முன்னிலையில் பிரதமர் அரசியல் பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்; தேர்தல் கமிஷனின் நடுநிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது எனக்கூறினார்.