சென்னை: திமுக வெற்றிபெற்ற உள்ளாட்சி பகுதிகளுக்கு குறைவான நிதிதான் வழங்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் பேசியது, வாய்தவறி பேசியதாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். கூட்டுறவு துறை சார்பாக 2 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஆய்வு கூட்டம் நேற்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு துறை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்தது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்கடன் தேவையான அளவுக்கு வழங்க ரூ.10 ஆயிரம் கோடி அறிவித்துள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது மட்டும், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. திமுக வெற்றிபெற்ற உள்ளாட்சி பகுதிகளுக்கு குறைவான நிதிதான் வழங்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் பேசியது, வாய்தவறி பேசியதாகும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.