சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் வரும் 5ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த விழாவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குடமுழுக்கை நடத்த தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 27ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் யாகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளுமாறு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அழைப்பிதழை வழங்கினார். அப்போது கும்பாபிஷேகம் விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருக்குடமுழுக்கு விழா குழு தலைவர் துரை. திருஞானம் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூச திருவிழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இணை ஆணையர் ஜெ.சி.ரெட்டி வழங்கினார். அப்போது, ஆணையர் பணீந்திர ரெட்டி உடனிருந்தார்.