சென்னை: பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக முன்னாள் டிஎஸ்பி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது. சிலை கடத்தல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட அந்த பிரிவின் முன்னாள் டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை பரிசீலனை செய்து விசாரித்த நீதிமன்றம், “வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா தாக்கல் செய்த முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை தொடர்பான ஆவணங்கள், அதேபோல் அவர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று கையெழுத்து இடுவதிலிருந்து விலக்கு கோரி தாக்கல் செய்த மனு, மற்றும் அது மீதான விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மேலும் காதர் பாஷா முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்து பதிவுகளையும் ஜனவரி 27ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்’’ என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் குப்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முந்தைய உத்தரவின் அடிப்படையில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் அது தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி கூறி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.