திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பணம், தங்க நகை, வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் நேற்று 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 7 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 5 முதல் 6 மணி நேரத்துக்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ4.13 கோடியை காணிக்கையாக செலுத்தினர். ஊஞ்சல் சேவை திருப்பதி ஏழுமலையான் கோயில் பின்புறத்தில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நேற்று மாலை புரந்தரதாஸ் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பிறகு ஊர்வலமாக சென்று நாராயணகிரி தோட்டத்தை அடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.