மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்னில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. அதில் ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் லாத்வியாவின் ஜெலனா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் லாரா செய்க்முன்டை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் சிசி பெல்லிஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செக்குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தி 3வது சுற்றில் விளையாட தகுதிப் பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் கர்பின் முருகுசோவா(ஸ்பெயின்), சிமோன் ஹலேப்(ருமேனியா), ஏஞ்சலிக் கெர்பர்(ஜெர்மனி), டோனா வேகிக்(குரோஷியா), கிகி பெர்டன்ஸ்(நெதர்லாந்து), ஜரீனா டியஸ்(கஜகிஸ்தான்) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
சானியா விலகல்: பெண்கள் இரட்டையர் போட்டியின் முதல் சுற்றில் சானியா மிர்சாவும், உக்ரைனின் நடியா கிசென்னோக்குடன் இணைந்து சீனாவின் ஜின்யுன் ஹன்/ லின் சூ இணையை எதிர்த்து விளையாடியது. கால் வலியால் அவதிப்பட்ட சானியா/நடியா இணையால், சீன இணையை சமாளிக்க முடியாமல் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் இழந்தனர். அடுத்து 2வது செட் தொடங்கிய சில நிமிடத்தில் மீண்டும் வலியால் அவதிப்பட போட்டியில் இருந்து சானியா இணை விலகியது. அதனால் சீன இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.