சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை குடியரசு தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றுகிறார். பிறகு அவர் முப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மேலும், தமிழக அரசு துறைகளின் வாகன அணி வகுப்பையும் பார்வையிடுகிறார்.
பிறகு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து குடியரசு தினத்தின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை மெரினா காமராஜர் சாலையில் நடந்தது. இதில் கவர்னர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. பிறகு தேசிய கீதம் இசைக்க அதிகாரிகள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினர். பின்னர் கடலோர காவல் படை, விமான படை, குதிரைப்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடந்தது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியின் ஒத்திகையும் நடைபெற்றது. முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சியால் நேற்று காலை மெரினா காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக வரும் 22,23 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.