சென்னை: திராவிட விடுதலை கழகம் சார்பில் தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், ‘கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த ஒரு இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் குறிப்பிட்ட உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.