பெரம்பூர்: போலீசாருக்கு ஒன்றரை வருடமாக டிமிக்கிக்கொடுத்து வந்த பிரபல ரவுடி சிக்கினான்.சென்னை வியாசர்பாடி, மகாகவி 16வது தெருவை சேர்ந்தவர் ரசூல்கான் (38). பிரபல ரவுடியான இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் கரீம் என்பவரை கடத்திய வழக்கு மற்றும் 2019ம் ஆண்டு போரூரில் ₹50 லட்சம் ஏமாற்றிய வழக்கு, 2018ல் பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி வழக்கு, 2014ல் திருவல்லிக்கேணியில் ₹25 லட்சம் கள்ளநோட்டு மாற்ற முயன்ற வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக ரசூல்கான் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு எம்கேபி நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் எஸ்ஐ பிரேம்குமார் தலைமையில் போலீஸ்காரர்கள் வினோத், சரவணப்பெருமாள், கார்த்திக் ஆகியோர் முல்லைநகர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ரசூல்கான் பைக்கை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றார். இதையடுத்து போலீசார் பைக்கில் விரட்டி சென்று ரசூல்கானை மடக்கி பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒன்றரை வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.