பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளது பாணாவரம். இங்கிருந்து மலைமேடு செல்லும் சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனை, சிறுவர் பூங்காவும் உள்ளது. பாணாவரம் அருகே உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் பஸ், ரயில், ஆட்டோக்களில் செல்ல இவ்வழியாக சென்று வரவேண்டும். இந்நிலையில் கால்நடை மருத்துவமனை மேற்பகுதியில் குட்டை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. மேலும் இங்குள்ள பள்ளத்தில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். மழைக்காலத்தில் குட்டையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதியில் கழிவுகளுடன் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் குட்டையில் உள்ள தண்ணீரில் கலந்துள்ள பிளாஸ்டிக், குப்பைக்கழிவுகளை அகற்றும்படி பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இங்குள்ள கழிவுகளை அகற்றாததால் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளனர். இதனால் குழந்தைகளுடன் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். பூங்காவில் விளையாடும் சிறுவர்களுக்கு நோய் தொற்றும் ஆபத்து உள்ளது. எனவே இப்பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.