சென்னை : தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை 2% அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன், இவ்வாறு கூறினார். மேலும் தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து விடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அதிகாலையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் நிரூபர்களிடம் கூறுகையில்,வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 16% மழை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்திருக்க வேண்டிய 76 செ.மீ.க்கு பதில் 64% மழை பெய்துள்ளது. ஜனவரியில் 3.4 செ.மீ. மழை பெய்துள்ளதால் சென்னைக்கு மொத்தத்தில் 10% மழை குறைவு ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் 64%அதிக மழை பதிவாகி உள்ளது. மேலும் ராமநாதபுரம்,நெல்லையில் 45%, தூத்துக்குடியில் 31% அதிக மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக மதுரை, பெரம்பலூர், தி.மலை. வேலூரில் 24% பருவமழை பெய்துள்ளது என்றார்.