×

உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவரை கைது செய்யவில்லை: பாஜக நிர்வாகி என்பதால் போலீசார் தயக்கம்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் தன் மனைவியை ரஹீம் என்பவர் சட்டவிரோதமாக முத்தலாக் அளித்து விவாகரத்து செய்துள்ளார். இவர் பாஜகவின் நிர்வாகி என்பதால் அவரை கைது செய்ய போலீஸார் தயங்குவதாகப் புகார் கூறப்படுகிறது. ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத் எனும் நவாப் கானின் மகன் அப்துல் ரஹீம் ஆவார். இவருக்கு அலிகரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவருடன் ஜனவரி 8, 2013-ல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என மனைவி ரபத் ஜெஹான் வீட்டாரிடம் ரஹீம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே கடந்த ஆகஸ்ட் 4, 2018-ல் ரபத் ஜெஹானை  ரஹீம் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதன் பிறகு இருவீட்டார் குடும்பத்தினரும் ரஹீமிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இதில் தோல்வி ஏற்படவே ரஹீம் தன் மனைவியிடம் ஒரே சமயத்தில் மூன்றுமுறை தலாக் கூறி கடந்த 2018 நவம்பரில் 10-ல் விவாகரத்து செய்துள்ளார். அப்போது முத்தலாக் குறித்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை தடை செய்திருந்தது.

இதனால் ரபத் கடந்த வருடம் நவம்பர் 14-ல் ரஹீம் மீது அலிகரின் சிவில் லைன் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு பின் கடந்த டிசம்பர் 1-ல் ரஹீம் மீது முத்தலாக், வரதட்சணை உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இதுபோன்ற வழக்குகளில் பலரையும் கைதுசெய்த போலீஸார் ரஹீமை இதுவரை கைது செய்யவில்லை. இதற்கு அவர் பாஜகவின் உத்தரபிரதேச மாநில நிர்வாகி என்பதே காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ரபத்தின் சகோதரர் கூறுகையில், இவர் பாஜக நிர்வாகி என்பதால் அவரை போலீஸார் கைது செய்யவில்லை. அலிகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வீட்டுக்குச் சென்ற போலீஸாரிடம் ரஹீம் இந்த விவகாரத்தில் எங்கள் இரு குடும்பங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாக போலி தஸ்தாவேஜுகளை காட்டி திருப்பி அனுப்பி விட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரஹீம் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த ஜாமீன் கிடைப்பது வரை ரஹீமை போலீஸார் கைது செய்யமாட்டார்கள் எனக் கருதுகிறேன் என கூறினர்.

இதனிடையே டெல்லி கேட் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் ரஹீம் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முத்தலாக்கை கொண்டு வந்த பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரே முத்தலாக் கூறி விவாகரத்து செய்திருப்பதும் அது தொடர்பான வழக்கில் போலீஸார் அவரைக் கைது செய்யாமல் இருப்பதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Uttar Pradesh ,divorcee ,Muthalak , Uttar Pradesh, Muthalak, arrested, BJP administrator, police, hesitant
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...