சென்னை: தனது சொந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்ததே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதற்கு சான்று என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது உண்மை இல்லை என்றும் அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை எனவும், இந்த தேர்தலை அரசு ஊழியர்கள் தான் நடத்தியதாகவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்கள் தான் வாக்குகளையும் எண்ணியுள்ளனர். அவ்வாறு உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனில் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தேர்தல் வாக்குகளை ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் காலை 8 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 10 மணி வரை நின்று கொண்டே எண்ணினார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என குறிப்பிட்டார். ஆதலால் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டுவது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று அவர் கூறினார். நடந்து முடிந்த தேர்தலில் எந்த பின்புலமும் இல்லாத 400க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றதே தேர்தல் நேர்மையாக நடைபெற்றதற்கு சான்று என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.