மதுரை: டெல்லி பல்கலை. மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஏராளமான வக்கீல்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரியும் கோஷமிட்டனர்.
இதுபோல் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்கத்தின், மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் 25 பேர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.