தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் ஊரின் தென் பகுதியில் அமைந்துள்ளது தாமரைகுளம் தெப்பக்குளம். தாமரைகுளம் ஊரினுள் அமைந்துள்ள ஒரே குளமான இக்குளத்தினை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான மக்கள் குளிக்க, துணிகள் துவைக்க, நீச்சல் பயில என பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தெப்பக்குளமானது எந்த ஒரு பராமரிப்புமின்றி, தூர்வாராமல் குப்பைகள், பாட்டில்கள் வீசப்பட்டு, முழுவதும் பாசிகள் படிந்து மாசடைந்து காணப்பட்டது. ஆனால் பருவமழையை தொடர்ந்து, அரசு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கையால் குளத்தினுள் அணை வெள்ளம் வந்தது. ஆனாலும் குளத்துக்குள் கிடந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்படாததால் அவை வெளியே செல்லமுடியாமல் அப்படியே தேங்கி கிடந்தன. இதனால் பெரும்பாலான மக்கள் இக்குளத்தில் குளிப்பதை தவிர்த்து வந்தனர்.
தற்போது வெயிலின் தாக்கம் கோடை சீசனைப் போன்று அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி விடுமுறைநாட்களில் மட்டும் சிலர் கூட்டமாக வந்து இக்குளத்தில் குளிக்கின்றனர். பேரூராட்சியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இக்குளம் நல்ல முறையில் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டால் பலவகைகளில் பயனுள்ளதாக இருக்கும். நீரும் சுத்தமாகும் மற்றும் குளமானது நிரம்பி மறுகால் ஓடையிலும் தண்ணீர் பாய்ந்து செல்லும் போது அருகாமையில் உள்ள ஊர்களும் செழிப்புறும். ஊரிலுள்ள பெரும்பான்மை மக்கள் குளிக்க இக்குளத்தினை பயன்படுத்தினால், இப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடும் குறையும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதி தண்ணீர்ப் பற்றாகுறை அதிகம் உள்ள பகுதியாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட்டு தெப்பக்குளத்தை தூர்வாரி அனைவருக்கும் பயன்பட ஆவனவற்றை விரைந்து செய்திட வேண்டும் என இப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.