×

காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வன்முறை சூழலை தூண்டிவிடுகின்றன: மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை(ஜேஎன்யு) கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதோடு, புதிய வரைவு கொள்கைகள் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள்  நடந்தன. இதனிடையே, பேராசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று பல்கலை வளாகத்தில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கலவரம் வெடித்தது. இடதுசாரி மாணவர்கள் அமைப்பை  சேர்ந்தவர்களும், ஏபிவிபி அமைப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். ஏபிவிபி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதில் பல்கலை மாணவர் சங்க தலைவர் அசி கோஷின் மண்டை உடைந்தது. இதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட சக  மாணவர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும், முகமூடி அணிந்த மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கினர். அதுமட்டுமின்றி ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே, டெல்லி  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மூகமுடி கும்பல் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சி செய்தி  தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, இந்த வன்முறை சம்பவத்திற்கு மோடி அரசும், பா.ஜ.,வும் தான் காரணம். உள்துறை அமைச்சரின் ஆதரவு இல்லாமலும், அவருக்கு தெரியாமலும் இது எப்படி நடந்திருக்க முடியும்? குண்டர்களின் அட்டூழியமும்,  பயங்கரவாத கொடூரமும் பல்கலை., வளாகத்தில் அரங்கேற்றப்பட்டதை நாடே பார்த்தது.

இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. முகமூடி அணிந்த குண்டர்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள்.அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கும் போது, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்துள்ளது. உள்துறை அமைச்சரின் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்க முடியுமா? பல்கலை., நிர்வாகமும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பல்கலை.யில் வன்முறை சூழலை உருவாக்குகின்றனர் என்று தெரிவித்தார். ஜெஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த  தாக்குதல் கண்டனத்துக்குரியது; காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பல்கலைக்கழகங்களில் வன்முறை சூழலை தூண்டிவிடுகின்றன என்று தெரிவித்தார்.

Tags : Parties ,Prakash Javadekar ,Congress ,Left , Parties including Congress and Left incite violence situation: Union Minister Prakash Javadekar
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...