சென்னை: வேட்டி வார தினத்தை கோ ஆப்டெக்ஸ் மறந்துவிட்டதால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதற்கு அதிகாரிகள் அலட்சியம் மற்றும் நிர்வாக குளறுபடியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் வேட்டி, சட்டை, போர்வை, சேலை, போர்வை உட்பட பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களும் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 2014ல் கோஆப்டெக்ஸ் நிறுவன இயக்குனராக இருந்த சகாயம் விற்பனையை பெருக்க கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் வேட்டி வார தினமாக கொண்டாட உத்தரவிட்டார். அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை வேட்டி தினமாக கடைபிடிக்கப்பட்டு அந்த தினத்தில் அரசு அலுவலகங்களில் தள்ளுபடி விலைக்கு வேட்டி விற்பனை செய்யப்பட்டு, அரசு ஆண் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வேட்டி அணிந்து வரும் நிலையை ஏற்படுத்தினார்.
இதன் மூலம் வேட்டி விற்பனை அதிகரித்தது மட்டுமின்றி, கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மீது அரசு ஊழியர்கள், மக்களுக்கும் நன்மதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் விற்பனையும் பன்மடங்கு அதிகரித்தது. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்த பொறுப்பில் விடுவிக்கப்பட்ட பிறகு வேட்டி வார தினத்தை கொண்டாட கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் மறந்து விட்டது. இதே போன்று கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதன் விளைவாக அதன் விற்பனை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி கோ ஆப்ெடக்ஸ் விற்பனை நிலையங்களில் ஜவுளி பொருட்களை வாங்க பொதுமக்கள் ேபாதிய ஆர்வம் காட்டாததால் விற்பனை சரிந்தது. இது போன்று தொடர்ந்து விற்பனை சரிவை சந்தித்து வருவதன் மூலம் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் விற்பனை நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடி விடும் சூழ்நிலை ஏற்படும்.