புதுடெல்லி: விமானம் புறப்பட தாமதமானதால், விமான பணிப் பெண்களுடன் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். கடந்த 2ம் தேதி டெல்லியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதைக்கு விமானத்தை கொண்டு செல்லும்போது, அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட் கண்டறிந்தார். இதனால், விமானத்தை பழுது பார்க்க முடிவு செய்த பைலட், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான பணிப் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விமானி அறையில் இருந்து பைலட்டுகளை வெளியே அழைக்கும்படி கூச்சலிட்டனர். இதற்கு விமான பணிப் பெண்கள் மறுத்துள்ளனர். அப்போது ஒரு பயணி, பைலட் வெளியே வரவில்லை என்றால், விமான அறையின் கதவை உடைத்து உள்ளே செல்வேன் என மிரட்டியுள்ளார். பெண் பயணி ஒருவர், பணிப் பெண்ணின் கைப்பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘விமானத்தில் அத்துமீறிய பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏர் இந்தியா நிர்வாகத்தை விமான போக்குவரத்து துறை இயக்குனரகமும் கேட்டுக் கொண்டுள்ளது,’’ என்றார்.