×

ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணிக்கு வயல்வெளியில் திடீர் பிரசவம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று காலை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு  வயல்வெளியில் பிரசவம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி சோனியா (22). இவர் 3வது முறையாக கர்ப்பமானார். இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நரியம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் சோனியாவை அழைத்து சென்றனர். நரியம்பட்டு அடுத்த ரகுநாதபுரம் அருகே சென்றபோது பிரசவவலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே அவரை அதேப் பகுதியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், சோனியாவுக்கு பிரசவம் பார்த்தனர். அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பின்னர் அங்கிருந்த பெண்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவமனை ஊழியர், சோனியாவின் உறவினர்கள் நன்றி கூறிவிட்டு மீண்டும் ஆம்புலன்சில் நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
வயல்வெளியில் பிரசவம் பார்த்த அப்பகுதி பெண்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான படங்கள் வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகள் குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags : Delivery
× RELATED சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு