×

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சரியான நேரத்தில் உணவு தராததால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மயக்கம்

நாகை: நாகை, சேலம், திருப்பூர் போன்ற இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாததால் சிலர் மயக்கம் அடைந்தனர். பலர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 11 மையங்களில் நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாகை அமிர்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் 1 மணி நேரம் தாமதமாகவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அதேபோல் மதியம் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஆகியோருக்கு உணவு ஆட்டோவில் எடுத்து வரப்பட்டது. இதனை பார்த்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த உணவு பொட்டலங்களை எடுத்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு மதிய உணவு கிடைக்காமல் போனது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை ஒன்றியத்துக்கு உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பணியில் இருந்து அலுவலர்களுக்கு பிற்பகல் 3.30 மணியாகியும் மதிய உணவு வழங்கப்படவில்லை. பசியில் வாடிய ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். ஒரு மணி நேரத்துக்குபின் சாப்பாடு வந்தது. சாப்பிட்டுவிட்டு பணியை தொடர்ந்தனர்.

அடிப்படை வசதி செய்து தரக்கோரி  ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா
அவிநாசி அருகே திருப்பூர்  மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெரியாயிபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக ஊழியர்கள் காலை 7 மணிக்கு வந்தனர். மையத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், மற்றும் காலை உணவு உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, 9 மணியளவில் திடீரென பொறுமையுடன் காத்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, பள்ளியின் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்ததும் அவிநாசி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி மற்றும் அவிநாசி டி.எஸ்பி. பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக காலை உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு சென்று பணியை தொடங்கினர்.

சம்பளத்தில் கமிஷன் பிடித்தம் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள்,  அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பணியில் சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 550க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850, உதவியாளர்களுக்கு 650 சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்றிரவு அதிகாரிகள் சம்பளம் வழங்கினர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850க்கு பதில், 700ம், உதவியாளர்களுக்கு 650க்கு பதில் 500ம் வழங்கப்பட்டது. இது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.



Tags : Teachers ,polling stations , Vote count, teachers, officials
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...