சென்னை : லைசென்ஸ் இல்லாத கடைகளை கண்டறிய ஜிஐஎஸ் வரைபடம் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துகள் டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டன. இந்த பணி அக்டோபர் மாதத்துடன் 100 சதவீதம் முடிவடைந்தது. தற்போது அப்படங்களை வரைபடங்களாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :சென்னையில் உள்ள சொத்துகளையும் கண்டறியும் வகையில் டிரோன் முறையில் வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணி முடிந்து வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணி நடைபெற்றுவருகிறது. களப்பணியாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று அந்த சொத்தின் விவரம் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதைதவிர்த்து கடைகள் தொடர்பாக தகவலை சேகரித்துவரும் பணியும் நடைபெற்றுவருகிறது. இந்த பணியின் படி கடையின் வகை, உரிமம் எண் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. தற்போது 120 வார்டுகளில் இந்த பணி முடிவடைந்துள்ளது. இந்த ஆய்வு முழுமையாக முடிவடைந்தால் சென்னையில் உள்ள சொத்துகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மாநகராட்சி வசம் இருக்கும். இதன் மூலம் உரிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் கடைகளை கணடறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.