திருச்சி: திருச்சியில் வங்கி ஒன்றில் கொள்ளையடித்த பணத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர், தலைமை காவலர் ஜோசப் ஆகியோருக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கொள்ளையன் முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதையடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் செயல்பட்டுவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி வங்கியின் சுவற்றை துளைத்து உள்ளே சென்ற நபர்கள் லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 450 சவரன் தங்கம் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராதா கிருஷ்ணன், முருகன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுரேஷ் மற்றும் முருகனை கஸ்டடியில் எடுத்த சமயபுர போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை முருகன் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் 20 ரூபாயை சென்னையை சேர்ந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை காவலர் ஜோசப் ஆகியோரிடம் லஞ்சமாக கொடுத்ததாகவும் மற்ற வழக்குகளில் தங்களை விடுவிப்பதற்காக அந்த பணத்தை கொடுத்ததாகவும் முருகன் பகிர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சமயபுரம் போலிஸார் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை காவலர் ஜோசப் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.