×

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: சர்ச்சில் துப்பாக்கிச்சூடு 2 பேர் பரிதாப சாவு: மர்மநபரும் சுட்டுக்கொலை

ஹூஸ்டன்: அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ெடக்சாஸ் மாகாணத்தில் ஒயிட் செட்டில்மென்ட் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடைபெற்றது.  நூற்றுக்கணக்கானோர் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் எழுந்து நின்று திடீரென துப்பாக்கியால் சுட்டார். இரண்டு முறை மர்மநபர் சுட்டார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறி கூச்சலிட்டபடி ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த தேவாலய பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் பாதுகாப்பு கருதி அந்த நபரை சுட்டார். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். ஞாயிறன்று நடந்த பிரார்த்தனை சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த வீடியோவில் மர்மநபர் எழுந்து நின்று அருகில் இருந்தவருடன் பேசுகிறார். அவர் மற்றொருவரிடம் சைகை மூலமாக எதையோ கூறிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதும், அதில் உயிர்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது.



Tags : America ,Churchill , America, shooting, shooting
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...