டெல்லி : வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் வெப்பம் 2.5 டிகிரியாக குறைந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், ஹரியானா என வட மாநிலங்களில் உச்சக்கட்ட குளிர் நிலவுகிறது. உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், பிராயக்ராஜ் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பம் 4 டிகிரியாக குறைந்தது. இதனால் சாலையில் வசிக்கும் மக்கள் குளிரை தாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
கடும் குளிர் காரணமாக, டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால் விமானங்கள் வருகை, புறப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட ரயில்கள், தாமதமாக இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி அருகே நொய்டாவில் பனிமூட்டத்தால்11 பேருடன் வந்த கார், டாங்கர் என்ற இடத்தில், கெர்லி கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த எஞ்சிய 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானா மாநிலம் ஹம்பாலாவில் கூடாரம் ஒன்றில் இருந்து பசுக்களில் குளிர் தாங்கமுடியாமல் 6 பசுக்கள் உயிரிழந்தனர். காஷ்மீரில் தால் ஏரி உள்ளிட்ட ஏரிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் 31ம் தேதி முதல் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்தந்த மாநில அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.