×

பிரசாரம் செய்வதில் தகராறு பாமக பிரமுகரை உருட்டுக்கட்டையால் அடித்து துவைத்த அதிமுகவினர்: சோழவரம் ஒன்றியத்தில் பரபரப்பு

சென்னை: பிரசாரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாமக பிரமுகரை அதிமுகவினர் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சோழவரம் ஒன்றியத்தில் 39  ஊராட்சி தலைவர்கள், 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு இன்று (30ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமக சார்பில்  பாமக முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாஷ் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் அழிஞ்சிவாக்கம் ஸ்ரீதர் என்கிற சுதர்சனம் (40) மற்றும் பலர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில் நேற்று மதியம் 12 மணி அளவில் வாக்காளர்களை சந்தித்து கொண்டிருந்தனர்.  

அப்போது அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் லோகநாதன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சுதர்சனம் என்பவரை, ‘ நீ ஏன் பிரகாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறாய்’ என்று கேட்டு வாய் தகராறில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.  இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கை முறிந்த நிலையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 வது வார்டு பகுதிக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் எம்ஜிஆர் நகர், ஜெகநாதபுரம், இருளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Dispute , Dispute, publicity, dispute
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...