ஆற்காடு: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஜீவாதாரமாக பாலாறு உள்ளது. முன்பு ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலை மாறி தற்போது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. தொடரும் மணல் கொள்ளையால் ஏற்கனவே உள்ள நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும் பாலாற்றில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் குடிநீர் மேலும் மாசடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேல்விஷாரம் சாதிக்பாஷா நகர் பாலாற்றில் கழிவுபொருட்கள், குப்பகைளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொண்டு வந்து தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால் கரும்புகை கிளம்பி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பாழடைந்த பாலாற்றில் இதுபோன்று மூட்டைகளைப் போட்டு எரிப்பதால் மேலும் மேலும் பாலாறு சீர்கெடும் அவலநிலை எள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.