×

மஞ்சூர் அருகே பரபரப்பு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே அரசு பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் அருகே கெத்தை கிராமம் உள்ளது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும்  சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10 காட்டு யானைகள்  நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை,  பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை  நாசம் செய்து வருவதுடன் நடு ேராடுகளில் நின்று வாகனங்களை வழிமறிப்பது  வாடிக்கையாக உள்ளது.

நேற்று காலை கோவையில் இருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கெத்தை அருகே 18வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது எதிரே 5 காட்டு யானைகள்  நடுரோட்டில் சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தன. இதை பார்த்தவுடன் டிரைவர் பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். அப்போது மஞ்சூரில் இருந்து  கெத்தை மின் நிலையத்திற்கு சென்ற வாகனங்களும் காட்டு யானைகளின்  வழிமறிப்பில் சிக்கின. யானைகளை கண்ட பேருந்து பயணிகள் பீதி அடைந்தனர். சுமார் முக்கால் மணி நேரத்துக்குபின்  யானைகள் மெதுவாக நடந்து சென்று சாலையோர காட்டுக்குள் இறங்கின.

இதைத்தொடர்ந்து அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. 10 கிராம மக்கள் பீதி: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை சுமார் 3.10 மணி அளவில் யானைக்கூட்டம் மாச்சம்பட்டு அருகே சாலையை கடந்து சென்றன. கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் மாச்சம்பட்டு, கொத்தூர், மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரபல்லி பெங்கலமுலை, சின்னவரிகம், பனங்காட்டூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : bus ride ,Manjur , Manjur, bus, bus, wild elephants
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...