குடியாத்தம்: குடியாத்தம் அருகே மினிவேனில் கடத்திய ரூ.25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சித்தூர் கேட் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடியாத்தத்தில் இருந்து சித்தூர் கேட் வழியாக ஒரு மினி வேன் வேகமாக வந்தது. இதை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் மினிவேன் நிற்காமல் மேலும் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் மினிவேனை விரட்டிச்சென்று சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமணாபுரம் கிராமம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் வேனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 2டன் எடை கொண்ட 21 செம்மரக்கடைகள் இருப்பது தெரியவந்தது.
மினி வேனுடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, மினிவேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் குடியாத்தம் அடுத்த பரசுராமன்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி(37) என்பது தெரியவந்தது. இந்த செம்மரக்கட்டைகள் தர்மபுரியிலிருந்து வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவிற்கு லாரி மூலம் கடத்தி வரப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கு என தனித்தனியாக மினிவேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகொண்டாவிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சைனகுண்டாவிற்கு நேற்று செம்மரக்கட்டைகள் மினிவேனில் கடத்தி செல்லப்பட்டது என தெரியவந்தது.