×

350க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு கால நிதி உதவியை வழங்காத நர்ஸ் மீது வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மகப்பேறு கால நிதி உதவியை பயனாளிகளுக்கு வழங்காத செவிலியர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ், தமிழக அரசு சார்பில்  நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்திட்டத்தில் பயனாளியின் விவரம், வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை பதிவு செய்து வங்கி கணக்கு மூலம் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மகப்பேறு கால பணப்பயன்களை பெற 350க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு முறையாக நிதி உதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. திட்டத்தின் படி ரூ.12 ஆயிரம், தலா 4 ஆயிரம் என மூன்று தவணைகளாக வழங்கப்படும். ஆனால் ஆரம்ப சுகாதார செவிலியர் ஆர்.சுமதி இந்த நிதியை பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த அமலா உள்ளிட்டோர் தமிழக அரசிடமும், சுகாதாரத்துறை இயக்குனரிடமும் புகார் அளித்தனர்.

இதனைதொடர்ந்து, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழங்கப்படாத பேறுகால நிதியை வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசும், செவிலியர் சுமதியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : nurse ,High Court ,nurses , 350, Beneficiaries, Maternity, Term Financial Assistance, Non-providing Nurse, Case, Government, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...