சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக உள்ள நிலையில் கட்சிகளை மீறி பல இடங்களில் அதிமுகவினர், பாமகவினர் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் நேரடியாக போட்டியிடுகின்றனர். இது அக்கூட்டணி உச்சகட்ட குழப்பத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 39 ஊராட்சி தலைவர்கள், 20 ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகள் உள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன.கூட்டணியில் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடைபெறாததால் கூட்டணிக் கட்சிக்குள் ஒருவரை ஒருவரை எதிர்த்து அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 13வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு, அவரது மனைவி தேவி பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்செட்டி நடராஜன் மனைவி இந்திரா அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதேபோல் சோழவரம் ஒன்றிய ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாமக முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாஷ் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சோழவரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் லோகநாதன் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதேபோல் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளில் பாமக, அதிமுக அவரவர் கட்சி சின்னங்களில் நேரடியாக மோதுகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் இருப்பது தெரியவந்துள்ளது.