புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் 66வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இதில் சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’, சிறந்த இந்திப் படமாக ‘அந்தாதுன்’ தேர்வானது. அதேப்போல் தெலுங்கில் ‘மகாநடி’ படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் நேற்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. உரி இந்தி படத்தை இயக்கிய ஆதித்யா தர் சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். ‘எல்லாரு’ குஜராத்தி படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஆயுஷ்மான் குரானா (அந்தாதுன் - இந்தி), விக்கி கௌசல் (உரி - இந்தி) பெற்றனர். ஜனாதிபதி புதுச்சேரி சென்றதால் தேசிய விருதுகளை இந்த முறை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கியுள்ளார்.