×

துணி குடோனில் தீ விபத்து 6 மாத குழந்தை உள்பட 9 பேர் பலி: டெல்லியில் தொடரும் சோகம்

புதுடெல்லி: டெல்லியில் துணி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் கிராரி என்ற இடத்தில் மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதி துணி குடோனாகவும், மேல் பகுதியை வாடகை வீடாகவும் பயன்படுத்தி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த குடோன் மற்றும் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அப்போது துணிகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.

வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பற்றி எரிந்த தீயில் இரண்டாம் மாடியில் உள்ள வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேர் பலியானார்கள். அதிகாலை 3.50 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இந்த கோர தீ விபத்தில் பூஜா(24), அவரது மகள் சவுமியா(10), 3 மாத குழந்தை ஆராதயா ஆகியோர் மட்டும் உயிர் தப்பினர். மற்றபடி கட்டிடத்தில் தங்கியிருந்த 9 பேரும் பலியானார்கள்.

கட்டிடத்தின் உரிமையாளர் ராம் சந்திரஷா, அவரது 6 மாத குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த குடியிருப்பில் தீயணைப்பு தடுப்பு கருவிகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் ராம் சந்திரஷா கீழ் பகுதியை விஜய்சிங் கட்டாரா என்பவருக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் வைக்கப்பட்டு இருந்தன. அனாஜ் மண்டி பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் 4 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியானார்கள். அந்த சோகம் மறையும் முன் தற்போது மீண்டும் டெல்லியில் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : baby Fire ,baby , In cloth kudon, fire, 6 month old baby, 9 people, kills, Delhi.
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி