×

ஊஞ்சலில் ஆடும் போது விபரீதம்: கழுத்தை கயிறு இறுக்கியதால் 2ம் வகுப்பு மாணவன் பலி: பெற்றோர் கதறல்

சென்னை: வீட்டில் இருந்த ஊஞ்சலில் ஆடும் போது நைலான் கயிறு கழுத்தை இறுக்கியதால் 2ம் வகுப்பு மாணவன் ஒருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான். சென்னை அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(43). இவரது மகன் கீர்த்திவாசன்(7). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் கீர்த்திவாசன் தன் வீட்டில் உள்ள ஊஞ்சலில் சுற்றியபடி விளையாடினான். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நைலான் கயிறு கீர்த்திவாசன் கழுத்தை இறுக்கியது. இதில் சிறிது நேரத்திலேயே கீர்த்திவாசன் மூச்சு திணறி மயங்கினான்.

இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாணவனை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கீர்த்திவாசன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். இதை கேட்ட அவனது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Swing accident ,Parents , Swing, rope, student kills
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்