×

திருவண்ணாமலையில் மகாதீபம் நிறைவு: தீபக்கொப்பரை கோயிலை வந்தடைந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 11 நாட்களாக எரிந்த மகாதீபம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று தீபக்கொப்பரை மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா, கடந்த 1ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக மலைமீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்நிலையில் மகாதீபம் நேற்றிரவுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் மலைமீது சென்று தீபத்தை தரிசித்தனர்.

மகாதீபம் நிறைவானதை தொடர்ந்து, தீபக்கொப்பரை மலை உச்சியில் இருந்து இன்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மலைமீது செல்ல முடியாத பக்தர்கள், கோயிலுக்கு கொண்டுவந்த தீப கொப்பரையை வணங்கினர். இந்த தீப கொப்பரையில் உள்ள மகாதீப மை, அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு பக்தர்களுக்கு தீபமை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mahadeepam ,Thiruvannamalai , Thiruvannamalai, the Great Deepam
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...