×

பல்லாவரம் சுற்றுப் பகுதிகளில் கைவரிசை பிரபல கொள்ளையன் பிடிபட்டான் : 35 சவரன், 3 லட்சம் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் சுற்றுப் பகுதிகளில் கைவரிசை காட்டியபிரபல கொள்ளை யயை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 35 சவரன், 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட அரசு கருவூலத்தில் கணக்காளராக பணிபுரியும் சத்தியவாணி (57). இவர், மருத்துவ சிகிச்சைக்காக அனகாபுத்தூரில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி இந்த வீட்டில் நுழைந்த மர்ம நபர், சத்யவாணி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சத்யவாணி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், அனகாபுத்தூரில் இருந்து கொள்ளையன் சென்ற பாதையில் உள்ள சுமார் 120க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், கொள்ளையன் வியாசர்பாடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தான் பறித்த நகையை விற்று பணம் வாங்கிக் கொண்டு செல்வது தெரிய வந்தது.
அந்த கடையில் கொள்ளையன் கொடுத்திருந்த முகவரி, செல்போன் எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது, பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி கார்த்திக் (எ) புறா கார்த்திக் (28) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவனது செல்போன் சிக்னலை வைத்து, ஈரோடு, சூரம்பட்டு, நான்கு சாலை சந்திப்பில் மனைவியுடன் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த சுமார் 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவர், கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளிகரணை, சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : pirate ,neighborhood ,Pallavaram ,bandit ,Famous , Famous bandit caught , Pallavaram neighborhood, 35 shaving, 3 lakh seized
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...