சென்னை: சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் அது தொடர்பான முழு ஆவணங்களையும் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.மாணிக்கவேல் வழக்கறிஞர் வாதத்தில், 17ஆயிரத்து 754 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டோம் எனக்கூறி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், முழு ஆவணங்களையும் பொன்.மாணிக்கவேல் கொடுக்கவில்லை. எனவே ஆவணங்களை ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு கேட்கும் அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரத்தில் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அடுத்த 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.