* பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்
* தள்ளுபடி விலை பொருட்களை வாங்க போட்டி
சென்னை: தினகரன் நாளிதழ் சார்பில் நடந்த ‘மாபெரும் உணவுத் திருவிழா’வில் விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தினகரன் நாளிதழ் சார்பில் ‘மாபெரும் உணவுத் திருவிழா’ கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடந்தது. தினகரன் நாளிதழுடன் இணைந்து எவரெஸ்ட் மசாலா, மிஷின் பேக்டரி, சன் இன்டஸ்ட்ரீஸ், பீதாம்பரி புராடெக்ட், தன்யா அசோசியேட் உள்ளிட்ட நிறுவனங்களும், இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்களும் இந்த மாபெரும் உணவுத் திருவிழாவில் பங்கேற்றன.
இதில், இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டன.
தினகரன் நாளிதழ் சார்பாக அரங்கிற்கு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் மில்கா ஒன்டர் கேக், பிளன்டி மசாலா டீ தூள் பொடி இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பாக கண்காட்சியை வந்து பார்வையிட்டனர். இதனால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து உணவுத்திருவிழா கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்துள்ள ஒவ்வொரு நிறுவனமும் கண்காட்சிக்கு வந்த பொதுமக்களை கவரும் வகையில் தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் பொருட்களை வழங்கினர்.கண்காட்சிக்கு வந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துக்கு தேவையான இயற்கை வகையிலான உணவுப் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கினர். மூன்று நாட்கள் நடந்த உணவுத்திருவிழா கண்காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மனநிறைவுடன் சென்றனர்.