சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாயப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அக்டோபர் முதல் இன்று வரை இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது.இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 2 செ.மீ. மழையும், காரைக்காலில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 585.1 மி.மீ. கோவை 431.6 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 31 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.